தீக்கோழி போல தலையை மணலில் புதைத்து இனப் பிரச்சினைகளில் இருந்து ஓடுவது முட்டாள்தனமானது: விக்னேஸ்வரன் பாராளுமன்றத்தில் அரசுக்கு பதில்
அத்துடன், இனப்பிரச்சினைக்கு சரியான மருந்து சமஷ்டி முறைமையே ஆகும் என்று அழுத்தம் திருத்தமாக தனது உரையில் தெரிவித்த விக்னேஸ்வரன், “தயவுசெய்து இந்த சந்தர்ப்பத்தை நழுவ விட்டுவிடாதீர்கள். ஆபத்தை உணரும்போது, தீக்கோழி தனது தலையை மணலில் புதைத்துக் கொள்வதுபோல பிரச்சினைகள் இருக்கும்போது அவை இல்லை என்று கூறி அவற்றில் இருந்து விலகி ஓடுவது முட்டாள்த்தனமானது. நாம் எல்லோரும் ஒன்றிணைந்து இனப்பிரச்சினையை எதிர்கொள்வோம். உங்களின் இந்த பொறுப்பை தட்டிக்கழித்து அதனை எமது வருங்கால வாரிசுகளிடம் விட்டுவிடாதீர்கள். யுத்தத்தை வெல்வது இலகுவானது. ஆனால், சமாதானத்தை வெல்வது கடினமானது. சமாதானமே நிரந்தரமான வெற்றியை ஏற்படுத்தவல்லது. இந்தப் புரிதலே அசோக மன்னன் பௌத்தத்தை தழுவக் காரணமானது.” என்று எடுத்துக்கூறினார். கூறினார்.
விக்னேஸ்வரன் அங்கு மேலும் பேசியதாவது,
தமிழ் மக்களின் பிரதிநிதி என்ற வகையில் இந்த இடைக்கால கணக்கறிக்கை தொடர்பில் அதிகம் கூறிக்கொள்வதற்கு எதுவும் இல்லை. யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கு உதவும் வகையில் என்றைக்கும் எந்த அரசாங்கமும் நிரந்தர பொருளாதார நலன்களை எமது மக்களுக்கு வழங்கவில்லை. அதேபோல, தமது பொருளாதார பிரச்சினைகளை கையாளுவதற்கான பொருளாதார அதிகாரமும் எமது மக்களின் கைகளில் இல்லை. சட்ட ரீதியான முதலமைச்சர் நிதியங்கள் கூட வடக்கு, கிழக்கு மாகாண சபைகளுக்கு மறுக்கப்பட்டன. அதனால், இன்றைய இந்த விவாதத்தில் எமது மக்களுக்கான நிலையான பொருளாதார வாய்ப்புக்களையும் வழிகளையும் ஏற்படுத்துவதற்கான அடிப்படை விடயமான இனப்பிரச்சினை தீர்வு பற்றி சில கருத்துக்களை பகிர்ந்துகொள்வது பொருத்தமானது என்று கருதுகின்றேன்.
சபாநாயகர் அவர்களே நான் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். நாம் ஏன் பிரித்தானியர்களிடம் இருந்து சுதந்திரத்துக்காகப் போராடினோம்? பிரித்தானிய இலத்தீன் போது அமைதியுடனும் செழிப்புடனும் இருந்தோம். உண்மையில், லீ குவான் யூ சிங்கப்பூரை மற்றொரு சிலோனாக மாற்றுவதாக உறுதிபூண்டிருந்தார். பிரித்தானியர்களின் கீழ் அந்தளவு அமைதியும் வளமும் உள்ள நாடாக இலங்கை இருந்தது. ஆனால் அவ்வாறு இருந்தும் நாம் சுதந்திரத்துக்காகப் போராடினோம். ஏன்? எம்மை உருவாக்கிய எமது மொழி, பாரம்பரியம், பண்பாடு ஆகியவற்றை உயிர்ப்பாக வைத்திருப்பதற்காகவே நாம் பிரித்தானிய ஆதிக்கத்தில் இருந்து விடுபட முடிவெடுத்தோம்.
வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் சரியாக இதேபோன்ற இக்கட்டான ஒரு நிலையில் தான் இருக்கிறார்கள். நாம் சிங்கள பௌத்த ஆதிக்கத்தின் கீழ் இன்று இருக்கின்றோம். இந்தியாவில் மகாத்மா காந்தி ஒரு வழியில் எமக்கான சுதந்திரத்தையும் பெற்றுக்கொடுத்ததால் நாங்கள் பிரித்தானியர்களிடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்கு ஆயுதங்களை ஏந்த வேண்டி இருக்கவில்லை. ஆனால், சிங்கள பௌத்த அரசாங்கத்தின் ஆதிக்கத்தின் கீழ் இருந்து விடுபடுவதற்கு எமது இளைஞர்கள் ஆயுதம் ஏந்த வேண்டி இருந்தது.
வடக்கு கிழக்கின் அரசியல், சமூக வரையறைகளை நான் நன்கு அறிவேன். நாடு முழுவதிலும், நீதித்துறையில் பணியாற்றியபின்னர், வட மாகாண சபையின் நிறைவேற்று முதலமைச்சராக சேவையாற்றுவதற்கு அழைக்கப்பட்டேன். இப்பொழுது நான் நாடு முழுவதுக்குமான சட்டவாக்கவாளர்கள் குழுவின் ஒரு உறுப்பினர். ஆகவே, எனது 80 வருட கால வாழ்க்கையில் அரசாங்க இயந்திரத்தின் மூன்று பகுதிகளிலும் நான் பணியாற்றி இருக்கின்றேன். எனது இந்த நீண்ட பயணத்தில் புற அலகுகள் மீதான மத்திய அரசாங்கத்தின் ஆதிக்கம் காரணமாக உள்ளார்ந்த ஏற்பட்ட குறைபாடுகளை நான் அறிவேன்.
தமிழ் மக்கள் அரசியல் இலக்குகளில் ஆர்வத்தை இழந்துவிட்டார்கள் என்றும் பொருளாதார சலுகைகளையே அவர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்றும் தேர்தல் முடிவடைந்த பின்னர் சிலர் கூற விழைந்துள்ளார்கள். அது உண்மையானால், வடக்கு – கிழக்கில் தமிழ் மக்களுக்கு என்ன தீர்வு வேண்டும் என்பதுதொடர்பில் சர்வதேச சமூகத்தின் மேற்பார்வையின் கீழ் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை வடக்கு கிழக்கு மக்கள் மத்தியில் நடத்துவதற்கு அரசாங்கத்துக்கு இதுதான் சரியான சந்தர்ப்பம். ஒற்றை ஆட்சியின் கீழ் பொருளாதார நலன்கள் மட்டுமே அவர்களுக்கு வேண்டும் என்று மக்கள் தீர்மானித்தால் நான் அரசியலில் இருந்து உடனே விலகி விடுவேன். இல்லையென்றால், எமது தலைவர்கள் புதிதாகச் சிந்தித்து அரசியல் மேதகைப் பண்புகளுக்குரிய முடிவுகளை எடுத்து எமது இனப்பிரச்சினையைத் தீர்க்க வேண்டும்.